மறக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இர்மா... இருளில் மூழ்கிக்கிடக்கும் ஃப்ளோரிடா மாகாணம்!
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை இர்மா சூறாவளி கடுமையாக தாக்கியதன் காரணமாக அந்த மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது.
வாஷிங்டன் : இர்மா புயல் ஓய்ந்தாலும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கோரத்தாண்டவம் ஆடிய சூறாவளிக் காற்றால் ஃப்ளோரிடா உருக்குலைந்துள்ளது, 3ல் இரண்டு பங்கு மக்கள் இன்னும் இருளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
கரீபியன் தீவுகளை சூறையாடிய இர்மா சூறாவளி கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. அப்போது மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாது பலத்த மழை பெய்தது.
இதன்காரணமாக மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பல ஆண்டு பழமையான மரங்களும் வேறோடு சாய்ந்தன. துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதி உடைந்தன. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைகீழாக புரட்டப்பட்டன. கட்டுமான தளங்களில் ராட்சத கிரேன்கள் முறிந்து விழுந்தன.
குப்பை மேடுகளான வீடு, சாலைகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா மாகாணம் முழுவதும் 70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மாகாணம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் லட்சக்கணக்கானோர் தஞ்சமடைந்தனர். சூறாவளி தாக்கிய புளோரிடா கீஸ், மியாமி உட்பட புளோரிடா மாகாணம் முழுவதும் கட்டிட இடிப்பாட்டுப் பொருட்களும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பொருட்களும் தேங்கிக் கிடக்கின்றன.
|
ஒரு வாரமாகும்
கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீர் தேக்கம், மரங்கள் மின்சார வயர்களில் விழுந்ததால் மின்விநியோம் தடைபட்டுக் கிடக்கிறது. ஃப்ளோரிடாவின் 3ல் இரண்டு பங்கு மக்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃப்ளோரிடா மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சரி செய்ய ஒரு வார காலமாகும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
இர்மா சூறாவளி தாக்கிய போது 15 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. தற்போது அது வலுவிழந்தாலும் கடல் இன்னமும் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. எனவே மியாமி உள்ளிட்ட கடற்கரை சுற்றுலாதலங்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்று புளோரிடா மாகாண அரசு எச்சரித்துள்ளது.
|
பொருளாதார இழப்பு
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வி புயல் தாக்கியது. அதைத் தொடர்ந்து இர்மா சூறாவளி புளோரிடா மாகாணத்தை சூறையாடியுள்ளது. இரு மாகாணங்களிலும் ஒட்டுமொத்தமாக ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.