ஈரானில் ராஜ்நாத்சிங்கை தொடர்ந்து ஜெய்சங்கர்... சீனா பக்கம் முழுமையாக சாயவிடாமல் தடுக்க படுதீவிரம்!
டெஹ்ரான்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் ஜரீப்பை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் கடந்த வாரம் ஈரான் சென்றிருந்த நிலையில் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்தியா- ஈரான் இடையேயான நல்லுறவின் அடையாளமாக சபாஹர் துறைமுக விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள கவ்தார் துறைமுகத்தை அந்த நாடு சீனா வசம் ஒப்படைத்தது.
கவ்தார் துறைமுகத்தை மேம்படுத்தி தமது கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் வழித்தடத்தில் பிரதான இடமாக்கிக் கொண்டது சீனா. இதற்கு பதிலடி தரும் வகையில் கவ்தார் துறைமுகத்துக்கு அருகே ஈரான் பகுதியில் சபாஹர் துறைமுகத்தை இந்தியா கையில் எடுத்தது.
ரஷ்யா பறக்கும் ஜெய்சங்கர்.. இடையில் ஈரானில் முக்கிய மீட்டிங்.. சீனாவுடனும் பேச்சு.. என்ன நடக்கிறது?
இந்தியாவும் சபாஹர் துறைமுகமும்
சபாஹர் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தியது. இதனால் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தியில் சீனாவுக்கு செக் வைக்கப்பட்டது. அத்துடன் ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற் கொண்டுவரும் அபிவிருத்தி பணிகளுக்கும் இந்த சபாஹர் துறைமுகம் உறுதுணையாக இருந்து வந்தது. ஈரான் - அமெரிக்கா மோதலுக்கு நடுவே, இந்தியா- ஈரான் உறவில் லேசான தளர்வு நிலை உருவானது.
சபாஹர் துறைமுகத்தில் சீனா
இதனை பயன்படுத்து சபாஹர் துறைமுகத்தின் 2-ம் கட்ட பணிகளை பறித்துக் கொள்வதில் சீனா களமிறங்கியது. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட பெரும் பின்னடைவாகவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் ஈரான் முற்று முழுதாக சீனாவின் கூட்டாளி நாடாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்தியா பெரும் முனைப்பு காட்டி வருகிறது.
ஈரானில் ராஜ்நாத்சிங்
அண்மையில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திடீரென ஈரானுக்கும் பயணம் மேற்கொண்டார். ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹடாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த வாரம் நடைபெற்ற இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜெய்சங்கர் ஈரான் பயணம்
இந்நிலையில் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஈரான் சென்றார். அங்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் ஜரீப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாகவும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.