அதிகாலையில் வெளுத்த இந்தியா.. ஒன்னும் பண்ண முடியாதுன்னு கொக்கரிக்கும் பாக்.. அமைச்சர்!
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுகூலமான நாடு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா களம் இறங்கி உள்ளது.
கனவு பலிக்காது
இந் நிலையில், இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் தொடர்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்று கூறியிருக்கிறார்.
தலைவர்கள் வருகை
மேலும் அவர் கூறியதாவது: வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வர உள்ளனர். பாகிஸ்தான் அணி வகுப்பு நாளான மார்ச் 23ம் தேதி, சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது வருகிறார்.
ஜெர்மன் அமைச்சர் வருகிறார்
அதேபோல், ஜெர்மன் அமைச்சர் ஹீகோ மாஸ் மார்ச் 12ம் தேதி பாகிஸ்தான் வருகிறார். ஐரோப்பிய யூனியன் பிரதிநிதி விரைவில் இஸ்லாமாபாத் வர இருக்கிறார்.
இந்தியாவின் நிலைப்பாடு
எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததோ ,அதே நிலைப்பாட்டை தான் தற்போதும் எடுத்துள்ளது.
பாக். திட்டவட்டம்
புல்வாமா விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் இம்ரான்கான் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்தியா தாக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயங்காது என்று கூறியிருக்கிறார்.