மாஸ்க் அணியவில்லை என்றால்... 'இதை' பண்ணிவிட்டு போங்க... இந்தோனேஷியாவில் விநோத தண்டனை
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பாலி பகுதியில் மாஸ்க் அணியாத வெளிநாட்டவர்கள் 50 புஷ்-அப்களை எடுக்க வேண்டும் என்ற விநோத தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் பகுதியிலுள்ள குட்டி தீவு நாடு இந்தோனேசியா. சுற்றுலாத் துறையையே பெரும்பாலும் நம்பியிருக்கும் ஒரு நாடாக இந்தோனேசியா உள்ளது. இதனால் கொரோனாவால் பொருளாதார ரீதியாக அந்நாட்டுப் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்தாண்டு இந்தோனேசியாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், அங்கு வரும் வெளிநாட்டினர் பலரும் மாஸ்க்குகளை முறையாக அணிவதில்லை. இதனால் அங்கு மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புஷ்-அப்
மாஸ்க்களை அணியாமல் வெளியே சுற்றும் நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகளும் அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியது. அதன்படி மாஸ்க்களை அணியாதவர்களிடம் இருந்து 100,000 ரூபியா அபராதமாக வசூலிக்கப்பட்டது. இருப்பினும், வெளிநாட்டவர்களில் பலர் தங்களிடம் பணம் இல்லை என்றே காவல் துறையினருக்கு பதிலளித்துள்ளனர். இதனால் மாஸ்க் அணியாத வெளிநாட்டவர்களை புஷ்-அப்களை எடுக்கக் காவல் துறையினர் உத்தரவிட்டனர். அதன்படி மாஸ்க்களை அணியாதவர்கள் 50 புஷ்-அப்களும் முறையாக மாஸ்க்குளை அணியாதவர்கள் 15 புஷ்-அப்களும் எடுக்க வேண்டும். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தங்களில் வைரலாகியுள்ளது.
ஏன் இந்தத் தண்டனை
இது குறித்துப் பாலி காவல் துறை கூறுகையில், "கொரோனாவைக் கட்டுப்படுத்த மாஸ்க்களை அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தத் தண்டனையை வழங்குகிறோம். வெளிநாட்டவர்கள் மாஸ்க்குகளை தங்களுடன் எடுத்து வருவதில்லை. இது கொரோனா பரவலை அதிகரிக்கும்" என்றார்.
நாடு கடத்தப்படுவார்கள்
இந்தோனேசிய அரசு மற்றொரு விநோதமான உத்தரவையும் கடந்தாண்டு பிறப்பித்தது. அதாவது பொது இடங்களில் மாஸ்க்களை அணியாத வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தது. இருப்பினும், இதுவரை மாஸ்க் அணியாத காரணத்தினால் யாரேனும் நாடு கடத்தப்பட்டுள்ளனரா என்ற தகவலை அந்நாடு பகிர்ந்துகொள்ளவில்லை.
இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தோனேசியாவில் 10,365 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தோனேசியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.27 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் 308 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனா உயிரிழப்பு 26,590ஆக உயர்ந்துள்ளது.