ஆஸ்திரேலியாவில் ஒரு பக்கம் அடாத மழை... மறுபக்கம் அடங்காத காட்டு தீ
குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் வெள்ளக்காடாக மாறி உள்ள நிலையில், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால், அங்கு அசாதாரண பேரழிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியான குயின்ஸ்லாந்தில் கடந்த வாரம் காட்டுத் தீ பற்றியது. அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயால் 22 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகி உள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்திற்குட்பட்ட கார்மிலா, வின்பீல்ட், டார்லிம்பிள் ஹைட்ஸ் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால், அந்நகர்களைச் சுற்றிலும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மேலும், எரிமலைப் போல தீப்பிளம்பு கக்குவதால், வனப்பகுதிக்கு அருகே இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுத் தீ ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக குயின்ஸ்லாந்து மாகாண முதல்வரான அன்ஸ்டாசியா பாலஸ்ஸக் கூறியுள்ளார். முக்கியமான தகவல்கள் உடனடியாக அவ்வபோது அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மறுபக்கம் சிட்னி நகரில் வரலாறு காணாத மழை பெய்ததால், அந்நகரமே வெள்ளக்காடானது. இது வரை மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மீட்பு பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. நவம்பர் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்ததால், சிட்னி நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது.