
ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பித்தாரா கனி? “வாய்ப்பே இல்லை” - தகவலை மறுத்த அமெரிக்க உளவு அமைப்பு
காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, 169 மில்லியன் டாலர் பணத்துடன் காபூலை விட்டு வெளியேறவில்லை என அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து அஷ்ரப் கனி பல மில்லியன் டாலர் பணத்துடன் தப்பியதாக கூறப்பட்டது.
அஷ்ரப் கனி இந்தக் குற்றச்சாட்டை மறுத்த நிலையில், அவர் பணத்துடன் தப்பிச் செல்லவில்லை என்று அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தற்போது கூறியுள்ளது.
என்னது தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியாவில் யுத்த பயிற்சியா? அடங்காத பரபரப்பு

தப்பிச் சென்ற அஷ்ரப் கனி
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதையடுத்து காபூல் நகருக்குள் நுழைந்த தாலிபான்கள் தலைநகரைக் கைப்பற்றினர். இதற்கிடையே, அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சமடைந்தார். அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டில் இருந்து தப்பியபோது ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.

பொய் என மறுப்பு
இந்தச் செய்தி குறித்து மறுப்பு தெரிவித்த அஷ்ரப் கனி, 20 ஆண்டுகாலம் என் உயிரைக் காப்பாற்றிய அன்புக்குரிய தேசத்தை விட்டுச் செல்வதா என்ற எண்ணம் இருந்தது. ஆனால், தாலிபான்கள் துப்பாக்கி முனையில் நாட்டை வைத்துள்ளார்கள். நான் வெளியேறாவிட்டால், ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள். காபூல் நகரை ரத்தக்களரியாக்க விரும்பவில்லை. அரசின் 169 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் நான் தப்பித்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. வெளியானது. அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. நான் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லும்போது என்னுடன் ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு ஜோடி செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதும் முற்றிலும் பொய்யான தகவல் எனத் தெரிவித்தார்.

கண்காணிப்பு அமைப்பு தகவல்
தாலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டுத் தப்பிக்கும்போது பெட்டி, பெட்டியாக பணத்துடன் வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுவிட்டதாக ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி மீது இன்றளவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் அவ்வளவு பணத்துடன் தப்பிச் செல்லவில்லை என அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தி ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஃபார் ஆப்கானிஸ்தான் ரீகன்ஸ்ட்ரக்ஷன் (SIGAR) அமைப்பு தனது ஆய்வறிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

1 மில்லியன் டாலர் தான்
கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அவருடன் இன்னும் சிலரும் சென்றனர். அப்போது ஹெலிகாப்டரில் பணம் கொண்டு செல்லப்பட்டது உண்மையே. ஆனால் அதன் அளவு 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே இருக்கும். இதற்காக அன்று நிகழ்விடத்தில் இருந்த அதிகாரிகள், வீரர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என 'சிகர்' தெரிவித்துள்ளது.

அவ்வளவு பணத்தை வைக்கவே முடியாது
மேலும், குற்றம்சாட்டப்படுவது போல 169 மில்லியன் டாலர் பணத்தை எடுத்துச் சென்றால், அது மட்டுமே ஹெலிகாப்டரில் 7.5 அடி நீளத்துக்கு, 3 அடி அகலத்துக்கு, 3 அடி உயரத்துக்கு அடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் எடை 3,722 பவுண்டுகளாக இருந்திருக்கும். அதாவது கிட்டத்தட்ட 2 டன். ஆனால் அஷ்ரப் கனி சென்ற ஹெலிகாப்டர் கார்கோ வசதியற்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது
அதேநேரம், ஹெலிகாப்டரில் இருந்த சில அதிகாரிகளில் ஒருவர் 2 லட்சம் டாலர், ஒருவர் 2.40 லட்சம் டாலர், 5,000 டாலர், 10 ஆயிரம் டாலர் என்ற தங்களின் கைப்பைகள், பாக்கெட்டுகளில் எடுத்துச் சென்றுள்ளனர் என்று சாட்சிகள் கூறுகின்றன. இது உண்மையாக இருந்தால் மொத்தம் 5 லட்சம் டாலர் எடுத்துச் செல்லப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது உறுதியாகவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.