உலகிலேயே முதன்முறையாக... சிறுவயதில் அகற்றப்பட்ட கருப்பை திசு மூலம் தாயான பெண்!
கின்சஷா: சிறு வயதிலேயே அகற்றப்பட்ட கருப்பை திசுவை உயிர்ப்பித்து அதன் மூலம் குழந்தைப் பேறை அடைந்துள்ளார் ஒரு பெண். உலகிலேயே இதுபோல நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்தப் பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு மிக அரிய நிகழ்வு என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளம் வயது புற்றுநோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதில் என்ன விசேஷம் என்றால் இந்த பெண் பூப்பெய்தும் முன்பே அவரது கருப்பை திசு அகற்றப்பட்டு விட்டது. பின்னர் அது பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது என்பதுதான். இதுபோல நடப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்.
வரலாற்று சாதனை...
இந்த கருப்பை திசுவை மீண்டும் உடலில் செலுத்தி அதன் மூலம் கருப்பையில் கரு முட்டைகள் உருவாகி தற்போது அந்தப் பெண் கருத்தரித்துள்ளார் என்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்து, குழந்தையும் நல்ல நலமுடன் உள்ளது.
காங்கோ நாட்டுப் பெண்...
இந்தப் பெண்ணுக்கு தற்போது 29 வயதாகிறது. அவரது 11வது வயதில் கருப்பை திசு அகற்றப்பட்டது. இப்பெண் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு சிக்கில் செல் அனீமியா இருப்பது 5வது வயதில் கண்டுபிடிக்கப்பட்டது.
போன்மேரோ சிகிச்சை...
இந்த நிலையில் அவரது 11வது வயதில் குடும்பத்தோடு பெல்ஜியத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு அவரது நோய் முற்றியுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், உடனடியாக அவருக்கு போன் மேரோ மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
கீமோதெரப்பி...
அவரது சகோதரரிடமிருந்து எலும்பு மஜ்ஜை எடுக்கப்பட்டது. அதற்கு முன்பு கீமோதெரபியும் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கீமோதெரப்பி செய்தால் கருப்பை பாதித்து கருமுட்டை வளர்ச்சி முற்றிலும் நின்று போய் விடும் என்பதால் தெரிப்புக்கு முன்பாகவே கருப்பின் வலது புறத்தை மட்டும் தனியாக எடுத்தனர். பின்னர் அதை உறைநிலையில் வைத்து பராமரித்தனர்.
ஹார்மோன் மாற்று அறுவைச் சிகிச்சை...
இந்த நிலையில் 15 வயதானபோது அவரது உடலில் இருந்த ஒரு பகுதி கருப்பையானது செயலிழந்தது. இதையடுத்து அவருக்கு மாத விடாய் வருதற்கு ஹார்மோன் மாற்று அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.
மீண்டும் அறுவைச் சிகிச்சை...
இந்த நிலையில் அப்பெண்ணுக்குத் திருமணமானது. இதையடுத்து பாதுகாக்கப்பட்டு வந்த கருப்பையை அவரது உடலில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தி அவர் கர்ப்பமுற டாக்டர்கள் உதவினர். தற்போது அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது.