பொருளாதாரத்தை சரித்து, பணத்தை கையாடிய வழக்கில் முன்னாள் ஈகுவடார் அதிபர் மஹவ்துக்கு 12 ஆண்டுகள் சிறை
குவிட்டோ: முன்னாள் ஈகுவடார் அதிபர் ஜமில் மஹவ்த் நாட்டின் பணத்தை கையாடிய வழக்கில் அவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு ஈகுவடாரின் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜமில் மஹவ்த்(64). அவரது ஆட்சியை எதிர்த்து மக்களும், ராணுவமும் போராட்டம் நடத்தியதை அடுத்து கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் அதிபராக இருந்தபோது எடுத்த நடவடிக்கைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து அதனால் தற்போது ஈகுவடார் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பணத்தை கையாடியதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் தங்கி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரியும் மஹவ்த் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அரசியல் நோக்கத்துடன் தனக்கு எதிராக பொய்யான வழக்கு போட்டுள்ளதாக மஹவ்த் தெரிவித்துள்ளார்.