ரகசியங்களைச் சொல்லப் போவதாகக் கூறியபடி மயக்கம்.. நீதிமன்றத்திலேயே மரணமடைந்த எகிப்து முன்னாள் அதிபர்
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெய்ரோ: எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான மோர்சி, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (67). இவர் அதிபராக இருந்த போது, இவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. மோர்சி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக அதிபர் மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை மோர்சி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ராணுவம் அவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மோர்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார் மோர்சி. அப்போது கண்ணாடி கூண்டுக்குள் இருந்து பேசிய அவர், 'தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கையிலேயே திடீரென மயங்கி விழுந்தார் அவர். உடனடியாக பாதுகாவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்பே அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, மோர்சியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப் பட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.