பின்லேடனை ஆப்கன் அழைத்து வந்த தீவிரவாதி அப்துல்ரசூல் அதிபர் தேர்தலில் போட்டி
அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடை பெற உள்ளது. தற்போது அதற்கான வேட்பாளர் பெயர் பதிவு நடைபெற்று வருகிறது. வரும் ஞாயிற்றுக் கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். இந்நிலையில், ஆப்கன் அதிபருக்கான தேர்தலில் முன்னாள் தீவிரவாதி ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அப்துல்ரசூல் சய்யாப் என்ற அந்தத் தீவிரவாதி, நேற்று தேர்தல் கமிஷனில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். .
அப்துல்ரசூல் கடந்த 1980 மற்றும் 1990-ம் அண்டுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் முகாம்களை அமைத்து தீவிரவாதிகளுக்கு ராணுவ பயிற்சி அளித்து வந்தவர். மேலும், கடந்த 1996-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவரான ஒசாமா பின்லேடனை சந்தித்து, சூடானில் தங்கியிருந்த அவரை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து வந்தவர்.
இவர் மூலமே அல் கொய்தா தீவிரவாதி இயக்கம் ஆப்கானிஸ்தானில் வேரூன்றத் தொடங்கியது எனக் கூறலாம். அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாத இயக்கம் நடத்திய சில தாக்குதல்கள் இவரது ‘மூளையே' காரணம் என்று சொல்லப் படுகிறது.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்துல்ரசூல் கருத்து கூறும்போது, தனது நாட்டிற்கு சேவை செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.