பாலஸ்தீன தனிநாட்டுக்கு இஸ்ரேல் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் ஆதரவு!!
பாரீஸ்: பாலஸ்தீன தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேல் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் தற்போது 'பார்வையாளர்' அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. பாலஸ்தீனம் ஒரு தனிநாடாக ஐ.நாவில் முழுமையான உறுப்பினர் நாடாக இணைவதற்கான முயற்சிகளை அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இதன் முதல் கட்டமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜோர்டான் நாடு ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அதில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து 2017ஆம் ஆண்டுக்குள் விலகிக் கொள்ள வேண்டும்; பாலஸ்தீனமும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; இதனடிப்படையில் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதனை ஏற்க முடியாது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளன. இந்த நிலையில் பிரான்ஸ் சென்ற இஸ்ரேலின் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் அந்நாட்டு அதிபர் ஹாலண்டேவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் பாலஸ்தீன தனிநாட்டை ஆதரிப்பதாக பிரான்ஸ் அதிபரிடம் கூறியுள்ளேன். இதில் எங்களுக்குள் எந்த ஒரு விவாதமும் இல்லை. யூதர்களுக்கு என்று ஒரு ஜனநாயக நாடு இருப்பதைப் போல பாலஸ்தீன நாடும் இருக்க வேண்டும். ஆனால் அந்த நாட்டை எப்படி அமைப்பது என்பதுதான் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே உள்ள பிரச்சனை என்றார்.
இஸ்ரேல் அரசோ பிடிவாதமாக பாலஸ்தீனத்துக்கு எதிராக நிற்கும் போது அந்நாட்டு முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும் என ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.