மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஜாமீன்.. கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்திய அரசு
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு அரசாங்கம் சுமத்தியுள்ளது.
நஜீப் ரசாக் நேற்று மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
'மலேசியா மேம்பாட்டு பெர்ஹார்டு' அமைப்பில் ரஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற ரூ.4,700 கோடி ஊழல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் அட்டார்னி ஜெனரல் டோமி தாமஸ், நஜீப் ரசாக் மீதான குற்றங்களை வாசித்தார். அதில் மூன்று குற்றங்கள் நம்பிக்கை மோசடி தொடர்பான கிரிமினல் குற்றங்களாகும், மற்றொரு குற்றம் அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இருந்தது.
இதில் ஒவ்வொரு குற்றச்சாட்டும் அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட சட்டத்தில் இடம் உள்ளது. அரசு பதவியை தவறாக பயன்படுத்திய வழக்கில் அவரிடம் அபராதமும் விதிக்க முடியும்.
ஊழல் தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாக இந்த அபராதத் தொகை இருக்கும். இன்றைய விசாரணையின் போது நஜிப்பின் பிள்ளைகளும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
நஜீப் ரசாக் நேற்று இரவு போலீஸ் லாக்அப்பில் அடைக்கப்பட்டிருந்தார். மலேசிய நேரப்படி இன்று காலை 8.20 மணிக்கு அவர் கோலாலம்பூரில் உள்ள ஹைகோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அடர் நீல வண்ணத்தில் சூட்டும் சிவப்பு வண்ணத்தில் டையும் அணிந்திருந்தார். தான் தவறு செய்யவில்லை என்றும் ஜாமீன் வழங்கும்படியும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 250,000 டாலர் மதிப்பில் பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கினார். இதனிடையே, கோர்ட்டில் அதிகப்படியான மீடியா உறுப்பினர்களும் பொதுமக்களும் குவிந்திருந்தனர். சில மாதங்கள் முன்பு முடிவடைந்த மலேசிய நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நஜீப் வெளிநாடு செல்வதற்கு புதிய அரசு தடை விதித்தது.
தற்போது 92 வயதாகும், மகாதீர் முகமது தலைமையிலான கூட்டணி அரசு மலேசியாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.