ஊழலுக்கு எதிராக மகாதிர் முகமது அரசு சாட்டை.. மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி கைது
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் இன்று கைது செய்யப்பட்டார் இதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். 'மலேசியா மேம்பாட்டு பெர்ஹார்டு' அமைப்பில் ரஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற ரூ.4,700 கோடி ஊழல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இவ்வாண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. ஆண்ட பாரிசன் நேஷனல் கட்சி தோல்வி அடைந்தது.
67 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்த அந்த கட்சி கூட்டணி முதல் முறையாக ஆட்சியை இழந்தது. 92 வயதான முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது வெற்றிபெற்று புதிய பிரதமராக பதவியேற்றார்.
மகாதீர் முகமது ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து ஆட்சி நடத்தியவர். வயது முதிர்வு காரணமாக அதன் பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
மகாதிர் முகமது க்கு பிறகு நேஷனல் கட்சியின் சார்பில் பிரதமர் பதவியை நஜீப் ரசாக் வகித்தார். ஆனால் இவரது ஆட்சி காலத்தில் ஊழல் மிகுந்து காணப்பட்டது. மக்களின் கோபத்தை புரிந்து கொண்ட மகாதீர் தனது கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்து மீண்டும் பிரதமரானார்.
மலேசிய அரசுக்கு சொந்தமான மலேசியா மேம்பாட்டு பெர்ஹார்டு நிறுவனத்தில் 4 ஆயிரத்து 700 கோடியை ஊழல் மூலம் நஜீப் சுருட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் அவரும் அவரது குடும்பத்தாரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று நிலையில் இன்று நஜீப் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், மகாதிர் முகமது அரசு, ஊழலுக்கு எதிராக வலுவாக சாட்டையை சுழற்றியுள்ளது.