நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் உள்பட 13 பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முன்னாள் மாநில நிதி அமைச்சர் ஹரி ராஜ் கெவா உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.
நேபாளத்தில் உள்ள தன்குடா மாவடத்தில் இருக்கும் தரண் என்ற இடத்தில் இருந்து 41 பேருடன் பேருந்து ஒன்று சன்குவாசபாவுக்கு வியாழக்கிழமை கிளம்பியது. பேருந்து சிந்துவா பஜார் அருகே சென்றபோது நிலைதடுமாறி 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அந்த பேருந்தில் இருந்த முன்னாள் மாநில நிதி அமைச்சர் ஹரி ராஜ் கெவா உள்பட 13 பேர் பலியாகினர், 28 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியானவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மீதமுள்ள 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர். முன்னாள் அமைச்சர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியானவர்களில் 3 வயது பெண் குழந்தையும் அடக்கம்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.