நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்
காத்மாண்டு: நேபாள நாட்டு முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) இன்று காலை மரணமடைந்தார்.
79 வயதான கொய்ராலாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலையில் அவர் மரணமடைந்தார்.
நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார் கொய்ராலா. 2014ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி முதல் 2015, அக்டோபர் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். கடந்த ஆண்டுதான் நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து கொய்ராலா பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
கொய்ராலாவுக்கு நுரையீரல் பிரச்சினை மட்டுமல்லாமல் நாக்கில் புற்று நோய் பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. இதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்துள்ளார்.
காத்மாண்டுவின் சனேபா என்ற இடத்தில் உள்ள நேபாள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன என்று நேபாள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் மான் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்தவர் கொய்ராலா. 1954ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். 1960ம் ஆண்டு நேபாள ஆட்சியை மன்னர் தன்வசப்படுத்தியதும் அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். கிட்டத்தட்ட 16 வருடம் இந்தியாவில் இருந்தபடி செயல்பட்டு வந்தார்.
1973ம் ஆண்டு நடந்த விமானக் கடத்தல் தொடர்பாக இந்திய சிறையில் 3 ஆண்டு காலம் அடைக்கப்பட்டிருந்தார் கொய்ராலா என்பது குறிப்பிடத்தக்கது.
Sushil Koirala ji's simplicity holds lessons for all of us. My condolences to the Koirala family & people of Nepal in this hour of grief.
— Narendra Modi (@narendramodi) February 9, 2016
மோடி இரங்கல்
கொய்ராலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், சுஷில் கொய்ராலாவின் எளிமை நமக்கெல்லாம் ஒரு நல்ல பாடமாகும். கொய்ராலா குடும்பத்தினருக்கும், நேபாள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மோடி.