ஹெட்லியின் வாக்குமூலம் அத்தனையும் கற்பனையாம்... 'ரா' ஏஜெண்ட்டாம்...சொல்வது பாகிஸ்தான் மாஜி அமைச்சர்
இஸ்லாமாபாத்: அமெரிக்கா சிறையில் இருக்கும் பயங்கரவாதி ஹெட்லி மும்பை தாக்குதல் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் அளித்துள்ள வாக்குமூலம் கற்பனையானது; ஹெட்லி ஒரு 'ரா' ஏஜெண்ட் என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்பு கொண்டிருந்ததாக அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள அவர் அமெரிக்காவில் சிறையில் உள்ளார். மும்பை தாக்குதல் வழக்கில் தற்போது அப்ரூவர் ஆகியுள்ள அவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அதில் மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்குமான தொடர்புகளை அம்பலப்படுத்தி வருகிறார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் 2 நாட்கள் வாக்குமூலம் அளித்திருந்தார் ஹெட்லி. தொழில் நுட்பகோளாறு காரணமாக நேற்று ஹெட்லி வாக்குமூலம் அளிக்கவில்லை.
ஹெட்லியின் வாக்குமூலத்தால் மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்தது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஹெட்லியின் வாக்குமூலத்தை பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக் நிராகரித்துள்ளார்.
மும்பை தாக்குதலின் போது பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராக இருந்த அவர், ஹெட்லியின் வாக்குமூலம் பொய்களின் தொகுப்பு என கூறியுள்ளார்.
மும்பையில் தாக்குதலை அரங்கேற்ற ஹெட்லியை இந்திய உளவு அமைப்பான ரா நியமித்து விட்டு, தற்போது அவரிடம் இருந்து கற்பனையான வாக்குமூலங்களை பெறுவதாகவும், இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் இந்தியா மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.