மனைவி மறைவு.. சிறையில் இருந்து நவாஸ் பரோலில் வெளியே வந்தார்
Recommended Video
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சும் நவாஷ் மறைவைத் தொடர்ந்து சிறையில் இருந்து நவாஷ் ஷெரிப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். லண்டனின் மிக முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாக். லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதற்கான நிதி ஆதாரத்தை இவரால் காண்பிக்க முடியவில்லை.
கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு நீதி மன்றம் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு முறையே 10 மற்றும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.
லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் ஆகியோர் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பி கைதுக்கு உள்ளாகினர்.
லண்டனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சும் நவாஷ் அப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து நவாஸ் ஷெரிப் மற்றும் மர்யம் ஆகியோர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராவல்பிண்டி சிறையில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். நவாஷின் மனைவி உடல் லாகூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அதில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் பங்கேற்ற பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.