மலேசியாவை விட்டு மாஜி பிரதமர் நஜீப் வெளியேற தடை- ஊழல் புகார் குறித்து விசாரணை!
மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நாட்டை விட்டு வெளியேற புதிய அரசு தடை விதித்துள்ளது. நஜீப் ரசாக் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் ஹரப்பான் கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 92 வயது மகாதீர் முகமது அந்நாட்டின் 7-வது பிரதமராக பதவியேற்றார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நாட்டை விட்டு வெளியே பிரதமர் மகாதீர் முகமது தடை விதித்திருக்கிறார். இன்று தமது 3 அமைச்சர்களை மகாதீர் அறிவித்தார்.
நிதி அமைச்சராக லிம் குவான் எங், பாதுகாப்பு அமைச்சராக முகமது சபு, உள்துறை அமைச்சராக முஹைதீன் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்போது, நஜீப்புக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மகாதீர் முகமது, நஜீப் வெளியேற தடை விதித்தது நான் தான். நஜீப்பின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்றார்.
இதனிடையே பாலியல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட இருக்கிறது. பொதுவாக சிறை தண்டனை அனுபவித்த ஒருவரால் 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட முடியாது என்பது மலேசிய சட்டம்.
அதேநேரத்தில் மலேசியாவின் மன்னர் பொதுமன்னிப்பு அளித்துவிட்டால் அந்த நபர் அரசியலில் ஈடுபட முடியும்.