யு.எஸ்.: முன்னாள் தீயணைப்பு படை வீரருக்கு வெற்றிகரமாக நடந்த முகமாற்று அறுவை சிகிச்சை
யு.எஸ்.: முன்னாள் தீயணைப்பு படை வீரருக்கு வெற்றிகரமாக நடந்த முகமாற்று அறுவை சிகிச்சை
மிசிசிப்பி: அமெரிக்காவில் தீ விபத்தில் முகம் கருகிப் போன முன்னாள் தீயணைப்பு வீரருக்கு வெற்றிகரமாக முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தைச் சேர்ந்தவர் பாட்ரிக் ஹார்டிசன்(41). முன்னாள் தீயணைப்பு படை வீரர். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி செனடோபியா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்து பாட்ரிக் உள்ளிட்ட வீரர்கள் அங்கு சென்றனர்.
தீ விபத்து நடந்த இடத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற அவர்கள் போராடினர். அப்போது பாட்ரிக் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தீயில் அவர் அணிந்திருந்த மாஸ்க் உருகி அவரது முகத்தில் ஒட்டியது.
இந்த விபத்தில் அவரது முகம் அகோரமானது, கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. உதடுகள், மூக்கு, கண் இமைகள் சேதம் அடைந்தது. 63 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவரை பார்த்து அவரது 3 குழந்தைகளும் பயந்தனர். இந்நிலையில் ப்ரூக்ளினில் மூளைச் சாவு அடைந்த டேவிட் ரோட்பாக்(26) என்பவரின் முகத்தை தானமாக வழங்க அவரது தாய் சம்மதித்தார்.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் பாட்ரிக்கிற்கு டேவிட்டின் முகத்தை பொருத்தும் முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சையில் அவர் உயிர் பிழைக்க 50 சதவீதம் தான் வாய்ப்பு உள்ளது என்று கூறியும் அறுவை சிகிச்சைக்கு அவர் ஒப்புக் கொண்டார்.
நல்லவேளையாக அவர் உயிர் பிழைத்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக உள்ளார். அவரால் தற்போது கண் இமையை மூடி தூங்க முடியும்.