அமெரிக்காவின் கொலரடோ ஸ்பிரிங்ஸில் பயங்கர துப்பாக்கிச்சூடு: குற்றவாளி உள்பட 4 பேர் பலி
கொலரடோ: அமெரிக்காவின் கொலரடோ ஸ்ப்ரிங்ஸில் ஒருவர் திடீர் என கண்மூடித்தனமாக சுட்டதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். பின்னர் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ளது கொலரடோ ஸ்ப்ரிங்ஸ். அந்த நகரில் உள்ள டவுன்டவுன் அருகே சனிக்கிழமை காலை ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீர் என கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் 2 பெண்கள் மற்றும் அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒருவர் என 3 பேர் பலியாகினர். இதையடுத்து அவர் பள்ளிகள், உணவகங்கள் உள்ள பகுதிக்கு சென்றார். இதைற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அந்த நபர் தனது துப்பாக்கியை காட்டி மிரட்டினார். துப்பாக்கியை கீழே போடுமாறு போலீசார் கூறியும் அவர் கேட்கவில்லை. மாறாக தனது துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டார். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர்.
சில நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.