இந்தோனேசிய கடலுக்கு அடியில் 59 அடி நீள பொருள்: ஏர் ஏசியா விமான பாகமா?
ஜகர்தா: இந்தோனேசியா கடலில் 4 பெரிய பொருட்கள் கிடப்பதை சோனார் கருவி கண்டுபிடித்துள்ளது. அவை கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடலில் விமானத்தை தேடும் பணி துவங்கி இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜாவா கடல் பகுதியில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.
4 பெரிய பொருட்கள்
தேடல் பணி நடக்கும் இடத்தில் கடலின் தரை மட்டத்தில் 4 பெரிய பொருட்கள் கிடப்பதை சோனார் கருவி கண்டுபிடித்துள்ளது. அவை விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
59 அடி நீளம்
கடலின் தரைமட்டத்தில் கிடக்கும் 4 பெரிய பொருட்களில் ஒன்று 59 அடி நீளம் கொண்டதாக உள்ளது.
கருப்பு பெட்டி
விமானத்தின் கருப்பு பெட்டியை தேட சிறப்பு கருவிகள் ஜாவா கடல் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாக மோசமான வானிலை தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தேடல்
கடலுக்கு அடியில் சென்று உடல்கள் மற்றும் விமான பாகங்களை தேடும் பணியில் 89 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ரஷ்யாவில் இருந்து டைவர்கள் வரவழைக்கப்பட உள்ளனர் என்று தேடல் பணிக்கு தலைமை வகிக்கும் பாம்பங் சுலிஸ்டியோ தெரிவித்துள்ளார்.