பெருவில் சுரங்க விபத்து... 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு
Recommended Video
லிமா: பெரு நாட்டில் மூன்று நாட்களாக சிக்கி தவித்த நான்கு தொழிலாளர்கள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சமீபத்தில் பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 120 க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகினர். இந்தநிலையில், பெருவில் சுரங்க விபத்து நிகழ்ந்துள்ளது.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகர் ஒயான். இங்கு தனியாருக்கு சொந்தமான பம்பாகுவாய் என்ற மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள்.
3 நாட்களாக தவிப்பு
கடந்த 1 ஆம் தேதி திடீரென பெய்த கனமழை காரணமாக சுரங்கத்துக்குள் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பம்பாகுவாய் சுரங்கம்
மூடப்பட்டது. ஆனால், சுரங்கத்தில் 330 அடி ஆழத்தில் நான்கு ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கடந்த 3 நாட்களாக தண்ணீர், உணவு இன்றி தவித்தனர்.
பத்திரமாக மீட்பு
அவர்கள் சுரங்கத்தில் சிக்கியது தெரிந்த உடனே சுறுசுறுப்பாக செயல்பட்ட மீட்பு படையினர், பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
8 முறை விபத்து
உடனடியாக, மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 3400 மீட்டர்கள் உயரமுடைய இந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்கனவே 8 முறை விபத்து நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேகாலயாவில் விபத்து
முன்னதாக, இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜைன்டியாவில் நிலக்கரி சுரங்கதில் கடந்த டிசம்பர் 13ம் தேதி கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 15 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஆனால் அவர்களில் ஒருவரை கூட மீட்க முடியவில்லை. ஒரே ஒருவரின் உடல் மட்டும் நீரின் மேல் மிதந்து வந்ததால் மீட்க முடிந்தது. 50 நாட்களை கடந்தும் உடல்கள் மீட்கப்படவில்லை.