வேலை பார்த்த நிறுவனங்கள் சம்பளம் வழங்காததால் 4 தமிழர்கள் துபாயில் சாலையோரம் தவிப்பு
வேலை பார்த்த நிறுவனங்கள் சம்பளம் வழங்காததால் 4 தமிழர்கள் துபாயில் சாலையோரம் தவித்து வருகின்றனர்.
ஷார்ஜா: வேலை பார்த்த நிறுவனங்கள் சம்பளம் வழங்காததால் 4 தமிழர்கள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் சாலையோரம் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களின் குடும்பத்தை பிரிந்து பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஏஜென்டுகள் மூலம் அதிக பணம் கட்டி செல்லும் அவர்கள் எதிர்ப்பார்த்த வேலையின்றி கொடுக்கும் வேலையை செய்து வருடம அவலமும் அரங்கேறி வருகிறது.
சில நிறுவனங்கள் பேசிய சம்பளத்தை வழங்காமல் தொழிலாளர்களை அடிமைகளை போல் நடத்தும் கொடுமைகளும் நடக்கின்றன. இதனால் வேலை தேடி வெளிநாடு சென்றவர்கள் அனைத்தையும் இழந்து எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஷார்ஜாவில் தவிக்கும் தமிழர்கள்
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டம் இறையூரைச் சேர்ந்த சிவா ஆகியோர் அஜ்மானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஷார்ஜாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் அஜ்மானில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
சாலையில் தவிப்பு
இதனால் ஆத்திரமடைந்த நிறுவனம் அவர்களது அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு அவர்கள் இருவரையும் தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியே அனுப்பியுள்ளது.
அவர்கள் இருவரும் ஷார்ஜா பகுதியில் உள்ள இதனால் செய்வதறியாது தவித்த அவர்கள் சாலையிலேயே தங்கியுள்ளனர்.
வேலையை தொடர முடியவில்லை
அவர்கள் இருவருக்கும் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலைபார்த்து வரும் தமிழர்கள் உணவுக்காக உதவி செய்து வருகின்றனர். இதேபோல் துபாயில் உள்ள நிறுவனத்துக்கு சங்கரன்கோவில் அருகேயுள்ள கீழநெலிதநல்லூரைச் சேர்ந்த செல்லதுரை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சேர்வீட்டைச் சேர்ந்த குப்பச்சி ஆகியோர் கடந்த 10 ஆம் தேதி வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு பேசப்பட்ட வேலையை தவிர வேறு பல வேலைகளையும் செய்ய சொல்லி நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதனால் வேலையை தொடர முடியாத நிலை இருந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சாப்பிடக் கூட வழியில்லை
இவர்களில் செல்லதுரை பி.எஸ்.சி., பி.எட் படித்த பட்டதாரி ஆவார். குடும்ப கஷ்டத்தின் காரணமாக அதிகபணத்தைக் கட்டி வேலைக்கு வந்ததாக கூறியுள்ளார்.
இதேபோல் கையில் அறுவை சிகிச்சை செய்துள்ள குப்பச்சியை சிமெண்ட் மூட்டை உள்ளிட்டவற்றை தூக்க நிறுவனம் கட்டாயப்படுத்துதாக தெரிவித்துள்ளார். வேலையில்லாமலும் கையில் காசு இல்லாமலும் சாப்பிடக் கூட வழியில்லாத நிலை உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தள்ளனர். மேலும் தங்குவதற்கு கூட இடம் இல்லாததால் இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாத நிலையில் இருந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊருக்கு செல்ல வேண்டும்
அவர்கள் 4 பேரும் தங்களை எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்ப இந்திய துணை தூதரகம் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். துபாய் மற்றும் ஷார்ஜாவில் சாலையோரம் தவித்து வரும் இவர்களுக்கு உதவிட விருப்பம் உள்ளவர்கள் 052 548 2026 / 058 2183439 / 052 992 7243 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.