வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகின் 4வது நாடாக பிரான்சிலும் 20 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு
பாரிஸ்: அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியையடுத்து பிரான்சிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அங்கு 1.55 லட்சத்தை தாண்டி உள்ளது.
Recommended Video
உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்று பிரான்ஸ். சுகாதார வசதியிலும் தலை சிறந்து விளங்கும் நாடும் கூட. பொருளாதாரத்தில் மிக வலிமையான நாடு பிரான்ஸ்.
நவீன ஆயுதங்களுடன் மிக வலிமையான ராணுவத்தையும் கைவசம் வைத்துள்ளது. உலகின் தலை சிறந்த நாடுகளில் முதல் 5 இடங்களுக்குள் பிரான்ஸ் நிச்சயம் இடம் பிடிக்கும்.
உலகில் 4 நாடுகளில் மட்டும் 1லட்சம் பேர் பலி.. கொரோனாவால் பலி 1.70 லட்சத்தை தாண்டியது
பிரான்ஸில் கடும் பாதிப்பு
இப்படி பல உயரிய சிறப்புகளை கொண்ட பிரான்ஸ் கண்ணுக்குத்தெரியாத கொரோனா என்ற அரக்கனிடம் சிக்கி அழிந்து வருகிறது. தினமும் கொரோனாவால் பிரான்ஸில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இன்று மட்டும் 2489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 155383 ஆக உயர்ந்துள்ளது.
நான்காவது நாடு
உலகிலேயே கொரோனாவால் அதிக மரணத்தை சந்தித்த நான்காவது நாடாகவும் பிரான்ஸ் உருவெடுத்துள்ளது. அதாவது அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளை தொடர்ந்து பிரான்சிலும் 20 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது உயிரிழப்பு. நேற்று ஒரு நாளில் மட்டும் 547 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை 37409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உடல் நிலை கவலைக்கிடம்
கொரோனா பாதிப்புடன் பிரான்சில் தற்போது 97709பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 5683 பேர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் தீவர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.பிரான்சில் பிப்ரவரி 15ம் தேதி 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை மார்ச் 1ம் தேதி 100 ஆக உயர்ந்தது
தவிக்கும் பிரான்ஸ்
மார்ச் 11ம் தேதி 2 ஆயிரத்தை கடந்த நிலையில், அடுத்து ஒவ்வொரு நாளும் அதிவேகமாக பரவியது. அடுத்த ஒரு வாரத்தில் 10 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் 25ம் தேதி பிரான்சில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா இருந்தது. அடுத்த 21 நாட்களில் அதாவது ஏப்ரல் 14ம் தேதிக்குள் 1.30 லட்சம் ஆக உயர்ந்தது. இப்போது 1.55 லட்சமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பரவும் வேகம் என்பது ஜெட் வேகத்தில் இருந்துள்ளது. இதனால் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது.