ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: பிரான்ஸ் ஆதரவு!
ஐ.நா.: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது அவசியம் என்று பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் விதமாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா உள்பட பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய 4 நாடுகளும் கூட்டாக வலியுறுத்தி வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஜி-4 மாநாட்டிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிரான்ஸ் முழு ஆதரவு தெரிவித்து வருவதுடன், கோரிக்கையும் விடுத்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்வதற்கு உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதுடன், தட்டி கழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில், 21ம் நூற்றாண்டில் எழுந்துள்ள சவால்களை முறியடிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வது அவசியம் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கொடுப்பது அவசியம் என்று பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இந்த கோரிக்கையானது பிரான்ஸ் அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்றாகவும் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதர் பிரானாய்ஸ் டெல்டர் கூறுகையில்," ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்த்திருத்தம் செய்வது அவசியமாக கருதுகிறோம். நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது கட்டாயம். இதில் மாற்றுக் கருத்துகளுக்கோ அல்லது கேள்விகளுக்கோ இடமில்லை.
உலக நாடுகளின் கருத்துக்களையும், நிலைப்பாட்டையும் எதிரொலிப்பதற்கு இந்த சீர்த்திருத்த நடவடிக்கை உடனடி தேவையாக இருக்கிறது. இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது அவசியமாக கருதுகிறோம். இந்த சீர்த்திருத்தம் ஆப்ரிக்க மக்களின் பிரதிநிதித்துவத்தை நிறைவு செய்யும் வகையில் இருத்தல் வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இதே கருத்தை ஐ.நா.வுக்கான ஜெர்மனி தூதர் கிறிஸ்டோப் ஹூஸ்ஜெனும் ஆமோதித்துள்ளார். தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உலக நாடுகளின் எண்ணங்களையும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்திலும் இல்லை. இந்த விஷயத்தில் பிரான்ஸ் நிலைப்பாட்டை ஜெர்மனி ஆதரிக்கிறது. சீர்த்திருத்தம் செய்யவில்லை என்றால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நம்பகத்தன்மையை இழக்கும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அக்பரூதீன் கூறுகையில்,"21ம் நூற்றாண்டில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், முன்னேற்றத்திற்கான நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் வேறுபட்டு நிற்கிறோம்," என்று ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக செயல்படுகின்றன. இதில், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கொண்ட நாடுகளாகவும், 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் செயல்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தற்காலிக உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படுவது வழக்கமாக பின்பற்றப்படுகிறது.