யாரையும் வேலைக்கு எடுக்காதீர்கள்.. ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு செக்.. தனியாருக்கு விற்க முடிவு!
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவில் இனி புதிய பணியாளர்களை சேர்க்க கூடாது, புதிய சேவை எதையும் தொடங்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லண்டன்: பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவில் இனி புதிய பணியாளர்களை சேர்க்க கூடாது, புதிய சேவை எதையும் தொடங்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா பணியாளர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி மத்திய ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் இந்திய ரயில்வேயில் முழுக்க முழுக்க தனியார் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை மத்திய அரசு சரியாக கவனிக்காமல் இத்தனை நாட்கள் இருந்தது. தற்போது அதை மொத்தமாக தனியார் வசம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இழப்பு
ஏர் இந்தியாவிற்கு தற்போது 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அதேபோல் மொத்தமாக அந்த நிறுவனம் 70000 கோடி ரூபாய் நஷ்டத்தில் செல்கிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 7600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தனியார் மயமாக்க முடிவு
இதனால் தற்போது ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மோடி தலைமையிலான கடந்த ஆட்சியிலேயே இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது. ஆனால் அப்போது ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஏற்ற நபர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை.
அமைச்சர்கள்
இந்த நிலையில் ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை எப்படி விற்பது என்பது தொடர்பான ஆலோசனைகளை இந்த குழு செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக சில அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இனிமேல் கூடாது
அதன்படி ஏர் இந்தியாவில் இனி புதிய பணியாளர்களை சேர்க்க கூடாது, புதிய சேவை எதையும் தொடங்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் இப்போது இருக்கும் பணியாளர்கள் யாருக்கும் பதவி உயர்வு வழங்க கூடாது. புதிய சேவையை ''அதி தீவிர தேவை'' இருந்தால் மட்டும் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளது .
எப்போது ஏலம்
இது தனியாருக்கு விருப்பதற்கான முன்னேற்பாடு ஆகும். இது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் தங்கள் வேலை எப்போது வேண்டுமானாலும் சிக்கலுக்கு உள்ளாகும் என்று பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் ஏர் இந்தியா முழுவதுமாக ஏலத்திற்கு வர வாய்ப்புள்ளது எனப்படுகிறது.