பிரான்ஸின் வருடாந்திர காமிக்ஸ் திருவிழாவில் சார்லி ஹெப்டோ கௌரவிப்பு
பாரீஸ்: பிரான்ஸில் நடக்கும் வருடாந்திர காமிக்ஸ் திருவிழா சார்லி ஹெப்டோ தாக்குதலில் பலியான கார்டூனிஸ்டுகளுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் ஆண்டுதோறும் உலக அளவில் பிரபலமான காமிக்ஸ் திருவிழா நடக்கும். இந்த திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நபர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான காமிக்ஸ் திருவிழா வியாழக்கிழமை துவங்கியது.
இந்த ஆண்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலக தாக்குதலில் பலியான கார்டூனிஸ்டுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவிழா நடக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சார்லி ஹெப்டோ பத்திரிக்கை நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து பலமுறை கார்டூன்கள் வெளியிட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் பிரான்ஸைச் சேர்ந்த சரிப் குவாச்சி மற்றும் செரிப் குவாச்சி ஆகிய சகோதரர்கள் சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் பத்திரிக்கையின் ஆசிரியர், 4 கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த பிறகு வெளியான சார்லி ஹெப்டோ சிறப்பு பதிப்பின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தின் கார்டூன் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.