தீவிரவாதிகள் ரசாயனத் தாக்குதல் நடத்தலாம்... பிரான்ஸ் பிரதமர் எச்சரிக்கை! அவசரநிலை நீடிப்பு!!
பாரீஸ்: பிரான்ஸில் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களைக் கொண்டோ வைரஸ் ஆயுதங்களைக் கொண்டோ தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டு பிரதமர் மானுவெல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பிரான்சில் 3 மாத காலத்துக்கு அவசர நிலையை நீடிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸின் இதயமான பாரீஸ் நகரில் பயங்கரவாதிகள் கடந்த வெள்ளியன்று கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் மும்பையில் தாக்குதல் நிகழ்த்திய பாணியில் பாரீஸின் பல இடங்களை ஆக்கிரமித்து கொடூரமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 129 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த அவசரநிலையை நீடிப்பது தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய பிரதமர் மானுவெல் வால்ஸ், பிரான்சில் பயங்கரவாதிகள் ரசாயன ஆயுதங்கள் மற்றும் வைரஸ் ஆயுதங்கள் மூலமாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. ஆகையால் அவசர நிலை பிரகடனத்தை நீட்டிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் முடிவில் பிரான்சில் மேலும் 3 மாத காலத்துக்கு அவசரநிலை பிரகடனத்தை நீடிக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்தனர்.