இந்த தாத்தாவை பார்த்தா பொறாமையாவும் இருக்கு.. லைட்டா பயமாவும் இருக்கு!
Recommended Video
பாரீஸ்: ஒரு பக்கம் பாம்புகள், மற்றொரு பக்கம் ஆமை, சுற்றிலும் எக்கச்சக்கமான கொடிய விஷமுள்ள விலங்குகள் என 67 வயசு தாத்தா ஒருவர் ஜம்மென்று வாழ்ந்து வருகிறார் பிரான்சில்.
லூரே என்ற நதிக்கரையில் உள்ள கிராமத்தில்தான் இந்த தாத்தா வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் பிலிப் கில்லட். இவருக்கு மிருகங்கள் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். ஆசை என்று சொல்ல முடியாது, வெறி என்றே சொல்லலாம்.
கூட்டு குடித்தனம்
இவர் தனது வீட்டையே ஒரு ஜூ போல மாற்றியுள்ளார். இரண்டு முதலைகளையும் தன் வீட்டில் வைத்துள்ளார். ராட்சச ஆமை, நல்ல பாம்பு, பயங்கரமான விஷம் உடைய கட்டுவிரியன் உள்ளிட்ட விலங்குகளை வீட்டிற்குள் வைத்துள்ளார். இப்படி மொத்தம் 400 விலங்குகள் இந்த தாத்தாவிடம் வளர்ந்து வருகின்றன. இவைகளுடன் ஒரு கூட்டு குடித்தனம் நடத்தி கொண்டு, அந்த விலங்குகளிடம் கொஞ்சிக் கொண்டும் நாட்களை கடத்தி வருகிறார்.
விலங்குகளின் காதலன்
விலங்குகளை எப்படி அன்பாக நடத்த வேண்டும், இயற்கையோடு இணைந்து நாம் எப்படி வாழ வேண்டும் பிரான்ஸ் மக்களுக்கு சொல்லி கொடுக்கிறாராம். ஆனால் இதையெல்லாம் மக்கள் கேட்டார்களோ, என்னவோ தெரியாது. அந்த தாத்தாவிற்கு "விலங்குகளின் காதலன்" என்ற பட்டப்பெயரை கொடுத்து விட்டார்கள்.
விசித்திர குடித்தனம்
ஆனால் உலகிலேயே விசித்திரமான கூட்டாளிகளுடன் வாழும் இந்த தாத்தாவிற்கு செலவுதான் ரொம்ப எகிறுகிறது போல. இந்த விலங்குகளை கட்டி மேய்க்க நிறையவே செலவு செய்ய வேண்டியிருக்கிறது. என்றாலும் அதையெல்லாம் சமாளித்துதான் இவ்வளவு காலம் இந்த குடித்தனம் செய்து வந்துள்ளார்.
வெளியூருக்கு அனுமதி
தாத்தாவின் விலங்குகள் குறித்தான கோரிக்கை, எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் கொள்கையை பார்த்த பிரான்ஸ் அரசு, விலங்குகளை வளர்க்க அனுமதி கொடுத்துள்ளது. அத்துடன், வெளியூர்களுக்கும் இந்த விலங்குகளை அழைத்து செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளது.
வெளியே தொங்கும் போர்டு
ஆனால் யாராவது அக்கம் பக்கத்தினரோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ வீட்டிற்குள் டபக்கென்று வந்துவிடக் கூடாது என்று தாத்தா உஷாராக தன் வீட்டிற்கு வெளியே ஒரு போர்டு மாட்டி தொங்க விட்டுள்ளார். அதில், ''அனுமதியின்றி உள்ளே செல்ல வேண்டாம்" என்று எழுதி வைத்துள்ளார்.