நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு - பீகாரிலும் 10 பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று பிற்பகலில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நான்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பிற்பகலில் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவினை மையமாகக் கொண்டு 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டரில் முறையே 7.3, 5.6, 5.5, 6.9 ஆக பதிவான இந்நிலநடுக்கங்களினால் சென்னை மற்றும் வட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உண்டாகின.
நேபாளத்தில் இன்றைய நிலநடுக்கங்களினால் ஏற்கனவே பலி எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில், மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலநடுக்கத்தினால் கிட்டதட்ட 1,000 பேருக்கும் மேலாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நடுக்கத்தின்போது நிலப்பகுதியே 25 நிமிடங்களுக்கு அலை போல் ஆடியதாக புவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 10 பேர் பலியாகியுள்ளனர். இப்பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்பட்டு வருகின்றது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக பீகாரில் முதலில் பகல் 12.36 மணி அளவில் முதல் நிலநடுக்கமும், அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது முறையாக பகல் 1.09 மணி அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள கிழக்கு சாம்பரான், மேற்கு சாம்பரான், மதுபானி, சுபால் உள்ளிட்ட இடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே போன்று மேற்கு வங்காளத்தில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்திய ராணுவத்தினரின் 11 மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் சாரிகோட் மற்றும் லாமாபாகர் கிராமங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக இந்திய விமானப் படை விமானம் ஒன்று அவசரமாக நேபாளம் விரைந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.