3 நாட்களாக முடங்கிய நிர்வாகம்.. திண்டாடும் மக்கள்.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
3 நாட்களாக அமெரிக்க நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருக்கிறது.
Recommended Video
நியூயார்க்: 3 நாட்களாக அமெரிக்க நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் தற்போதுதான் அமெரிக்க அரசாங்கம் முடங்கி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிடிவாதமான குணமும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறது.
அங்கு இருக்கும் இந்தியர்களும் இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலருக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
நடப்பது என்ன
தற்போது அமெரிக்க அரசு முடங்கி இருக்கிறது. இதனால் அரசு நிர்வாகம், அலுவலகம், கடைகள் எதுவும் இயங்காது. சுற்றுலாதளம் கூட இயங்காது. மருத்துவமனைகள், காவல்துறை, தீயணைப்புத்துறை போன்ற அவசர விஷயங்கள் மட்டும் செயல்பாட்டில் இருக்கும். கிட்டத்தட்ட இந்தியாவில் நடக்கும் முழு பந்த் போன்றது.
காரணம் என்ன
அமெரிக்காவின் செனட் சபையில் ஆளும் கட்சி கொண்டு வந்த தீர்மானம் ஒன்று நிறைவேறவில்லை. அந்நாட்டின் புதிய வரவுசெலவுத் திட்டத்தை இந்த தீர்மானம் மூலம் மட்டுமே செயல்பாட்டில் கொண்டு வர முடியும். தற்போது தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதால் அரசாங்கம் முடங்கி இருக்கிறது. யாருக்கும் சம்பளமும் வழங்கப்படாது.
எப்படி உருவானது
இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கடந்த வெள்ளி வரை காலம் இருந்தது. அதற்குள் இந்த தீர்மானத்திற்கு 60 பேர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால் இதற்கு 50 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனால் அந்த நாட்டின் 2018 பட்ஜெட் தோல்வி அடைந்தது. இதற்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது முக்கிய காரணம்.
இருவரும் பிடிவாதம்
டிரம்ப் அமெரிக்காவை சுற்றி சுவர் எழுப்பவும், ராணுவத்தை பலப்படுத்தவும் அதிக தொகை ஒதுக்கும் வகையில் பட்ஜெட்டை வடிவமைக்க சொன்னார். ஆனால் எதிர்கட்சிகள் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க சொன்னது. இதற்கு டிரம்ப் ஒப்புக் கொள்ளாத காரணத்தால் இந்த தீர்மானம் நிறைவேறாமல் இருக்கிறது.