உயிரிழந்த பிஞ்சுகளின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம்.. உலுக்கிய பெற்றோரின் கதறல்!
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 141 மாணவ மாணவியர், ஆசிரியர்களின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன. பெஷாவர் முழுவதும் சோகமும், கதறலுமாக உள்ளது.
இறந்தவர்களில் 132 பேர் மாணவ மாணவியர் ஆவர். இவர்களுக்கு 12 முதல் 16 வயதுக்குள்தான். 9 பேர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள்.
இந்த கொடும் தாக்குதலில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவியர் ஆவர்.
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 132 மாணவ, மாணவிகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உடனுக்குடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்றிரவே பெரும்பாலான உடல்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது. சில மாணவர்கள் முகம் சிதைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலையில் இருந்து பலியான மாணவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சில இடங்களில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து குழிகள் தோண்டி மொத்தமாக மாணவர்கள் உடல்கள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
இதனால் பெஷாவர் நகரமே சோகமாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் அழுகையும், வேதனையுமாக மக்கள் உள்ளனர். இந்த சம்பவம் இது பெஷாவர் நகர மக்களிடம் ஆழ்ந்த இரங்கலை ஏற்படுத்தியது.