லெபனானில் கடாபி மகன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விடுதலை
பெய்ரூட்: லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான முகமது கடாபியின் மகன் ஹன்னிபல் கடாபி லெபனானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லிபியாவில் புரட்சி ஏற்பட்டபோது சர்வாதிகாரி முகமது கடாபி கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதில் அவரது உறவினர்கள் பலரும் தப்பி வெளிநாட்டுக்கு ஓடிவிட்டனர்.
அண்மையில் லெபனான் தொலைக்காட்சி ஒன்றில் கடாபி மகன், ஹன்னிபல் கடாபி 1978ஆ-ம் ஆண்டு லிபியாவில் மாயமான ஷியா மதகுரு மவுசா அல் சதார் குறித்த தகவல்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து லெபனான் தீவிரவாதிகளால் அவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு பின் அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஷியா மதகுரு மவுசா அல் சதார் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி முன்னர் ஹன்னிபல் கடாபி ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிகவும் பிரபலமான ஷியா மதகுரு அல் சதார், 1978-ல் திரிபோலிக்கு சென்றிருந்த நிலையில் மாயமானார். அவர் மாயமான விவகாரத்தில் கடாபிக்கு தொடர்பிருப்பதாக லெபனான் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.