14 வயது சிறுமி பலாத்காரம்... தண்டனையாக 1200 கிலோ கோதுமை இழப்பீடு... பாக். "நாட்டாமை" உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணிற்கு இழப்பீடாக 1200 கிலோ கோதுமை வழங்கச் சொல்லி ஊர் பஞ்சாயத்தார் உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது உமர்கோட் கிராம. அங்கு 14 வயது பெண் ஒருவர் சமீபத்தில் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தப் பிரச்சினைக்காக பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த பஞ்சாயத்தால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் 1200 கிலோ கோதுமை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆனால், இதனை ஏற்க அப்பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இது தொடர்பாக போலீசிலும் அவர் புகார் அளித்தார். அப்புகாரில், தன்னை போலீசில் வழக்கு பதிய விடாமல் ஊர் பஞ்சாயத்தினர் கட்டாயப்படுத்தி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்/.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிராமத்தில் ஜிர்கா என்ற பஞ்சாயத்து முறை ஒழிக்கப்பட்டு சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பெண்ணின் தந்தை புகாரை பெற்று சிலரை கைது செய்துள்ளோம்" என்றார்.