பெற்றோர் ஆகும் ஆசையில் பென்குயின் குஞ்சை கடத்திய ஒருபாலுறவு பென்குயின்கள்
பென்குயின் பறவைகள் சில நேரங்களில் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன.
டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள, ஒருபாலுறவில் வாழும் இரு ஆண் பென்குயின்கள் தாங்களும் ஒரு பென்குயின் குஞ்சை வளர்க்க வேண்டும் எனும் விருப்பத்தில் இருந்தன.
பூங்காவைச் சுற்றி வரும் சமயங்களில் பிற பென்குயின்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் மீது அவை ஆர்வம் காட்டி வந்தன. சமீபத்தில் தந்தை பென்குயின் ஒன்று தன் அருகில் இருந்த தனது குஞ்சைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டது இந்த ஒருபால் தம்பதி.
அப்போது அந்தப் பென்குயின் குஞ்சின் தாய் நீரில் ஆசுவாசமாக குளித்துக்கொண்டிருந்தது.
- அண்டார்டிகாவில் கொத்துக்கொத்தாக செத்து மடியும் பென்குயின் குஞ்சுகள்
- கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் - தீர்வுக்கு என்ன வழி?
பெற்றோர் இருவருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை, இதுதான் வாய்ப்பு என்று நினைத்த இந்த ஆண் பென்குயின்கள் அந்தக் குஞ்சைக் கடத்திக்கொண்டு தங்கள் பகுதிக்கு வந்துவிட்டன.
இதை அந்த மிருகக்காட்சி சாலை ஊழியர் சாண்டி ஹெட்கார்ட் கவனித்துக்கொண்டிருந்தார்.
"பெற்றோருக்குத் தெரியாமல் அந்த இளம் குஞ்சை இந்த ஆண் பென்குயின் ஜோடி தூக்கி வந்துவிட்டது," என்கிறார் அவர்.
தாயின் தேடல்
காணாமல் போன பின்னும் தந்தை பென்குயின், குஞ்சைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. குளித்து முடித்ததுவிட்டுத் திரும்பிய தாய்தான் சோகத்துடன் தேட ஆரம்பித்தது.
https://www.facebook.com/OdenseZOO/videos/2100354073563106/
அடுத்த நாள் காலை வரை தங்கள் குழந்தை கிடைக்காததால் அந்தப் பெற்றோர் தங்கள் தேடலைத் தீவிரப்படுத்தினார்கள்.
இரு தம்பதிகளும் நேருக்கு நேர் சந்தித்ததும் மோதல் முற்றியது. ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டத் தொடங்கினர், சிறகுகளை வேகமாக அசைத்தும், வாலை ஆக்ரோஷமாக தரையில் உரசியும் தங்கள் அச்சுறுத்தலைத் தொடங்கினர்.
கடத்தி வந்த பென்குயின்கள் பென்குயின் குஞ்சை மறைத்து வைக்க முயன்றன.
சமரச முயற்சி
மோதலைத் தடுக்க ஊழியர் சாண்டி ஹெட்கார்ட் உடனே தலையிட்டார். மறைத்து வைக்கப்பட்டிருந்த குஞ்சை எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
இந்த நடவடிக்கை மூலம் தாங்கள் ஒரு குழந்தையை வளர்க்கத் தயாராக உள்ளதை அந்த ஒருபாலுறவு பென்குயின்கள் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துள்ள பூங்கா ஊழியர்கள், அவர்களுக்கு இதுவரை பொறிக்கப்படாத முட்டை ஒன்றை வழங்கியுள்ளனர்.
அந்த முட்டைக்கு கருவாகும் திறன் உள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி அதில் கரு உண்டானால் நிச்சயமாக அதை ஆண் பென்குயின்களே அடைகாத்து குஞ்சு பொறிக்க முடியும்.
இரு தம்பதிக்குமே சுமூகமான தீர்வு கிடைத்துள்ளதால் இப்போது அந்த மிருகக்காட்சி சாலையில் அமைதி நிலவுகிறது.
https://www.youtube.com/watch?v=Q3viaA_htMM
பிற செய்திகள்:
- திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா? -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme
- பாஜக ஆட்சியில்தான் அதிக விமான நிலையங்கள் கட்டப்பட்டதா? பிரதமரின் கூற்று சரியா?
- 2000 ஆண்டுகள் மண்ணில் புதைந்திருந்த ரோமப் பேரரசின் கிராமம்
- மணமாகாத ஆண் விசித்திரமாக பார்க்கப்படுவது ஏன்?