பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: சொல்வது 50 பச்சிளங் குழந்தைகளை படுகொலை செய்த இஸ்ரேல்!
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று இஸ்ரேல் அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் 50 பச்சிளங்குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவே அனைத்து சர்வதேச ஊடகங்களும் பதிவு செய்திருக்கின்றன.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகளில் இஸ்ரேல் கொடூர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 50 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்காலிக யுத்த நிறுத்தத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று இன்று 5 மணிநேர யுத்த நிறுத்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் கடைபிடித்தன.
இந்த யுத்த நிறுத்தத்தின் போதும்கூட ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று 4 அப்பாவி சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் உட்பட சர்வதேச ஏடுகளிலும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து விளக்கம் அளித்த இஸ்ரேல் அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகிவ், காஸாவில் ராணுவ நிலைகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவே இல்லை என்று கூறியுள்ளார்.