எங்கள் நிலைமையை பார்த்தீங்களா?: 'ரபுள் பக்கெட்' சவாலை அறிமுகப்படுத்திய பாலஸ்தீனியர்
காசா: காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் படும்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரபுள் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏ.எல்.எஸ். என்னும் நரம்பு பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏழைகளுக்கு உதவ ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ரைஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் பாலஸ்தீனியர்கள் புதியதொரு பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ரபுள் பக்கெட் சவால்
காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடித்தியதில் திரும்பிய பக்கம் எல்லாம் இடிந்த கட்டிடங்கள் தான் உள்ளது. இந்நிலையில் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஸாவை சேர்ந்த பத்திரிக்கையாளரான அய்மான் அலோல் ரபுள் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தி உள்ளார்.
வீடியோ
அய்மான் ரபுள் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை 75 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
தண்ணீர்
ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க எங்களால் முடியாது. காரணம் தண்ணீர் பற்றாக்குறை. அப்படியே தண்ணீர் கிடைத்தாலும் அதை ஜஸாக்க மின்சாரம் இல்லை என்று அய்மான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகள்
காஸாவில் திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் கட்டிடங்கள் இடிந்து கிடக்கின்றன. இதையடுத்து தான் இடிந்த கட்டிடங்களில் இருந்து மண், கல் ஆகியவற்றை எடுத்து தலையில் போட்டுக் கொள்ளும் ரபுள் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தினேன் என்றார் அய்மான்.
ஐடியா
பொருளோ, நிதியோ வேண்டி இந்த சவாலை அறிமுகப்படுத்தவில்லை, பாலஸ்தீனியர்களின் நிலை மாற நல்ல ஐடியாக்களை வேண்டி தான் அறிமுகம் செய்தேன் என்றார் அய்மான்.
ஃபேஸ்புக்
ரபுள் பக்கெட் சவாலின் ஃபேஸ்புக் பக்கத்தை இதுவரை 11 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் ரபுள் பக்கெட் சவாலை ஏற்று அந்த வீடியோக்களை வெளியிடுவதுடன் தங்கள் நண்பர்களையும் இந்த சவாலை ஏற்குமாறு கூறி வருகிறார்கள்.