பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்? தொடங்கியது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு
பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு இன்று தொடங்கியது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று தொடங்கியது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்த நவாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பனாமா பேப்பரில் நவாஸ் ஷெரீப்பின் பெயர் இடம்பெற்றுள்ளதால் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார். இதையடுத்து 10 மாதங்களாக அதே கட்சியை சேர்ந்த ஷாஹித் காகான் அப்பாஸி பிரதமராக இருந்தார்.
இதையடுத்து நசிரூல் மல்க் என்ற சுயேச்சை உறுப்பினர் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். தற்போது இந்த பதவிக்கான தேர்தல் தொடங்கியது. இதில் நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கும் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ) இம்ரான் கானின் கட்சிக்கும் (பாகிஸ்தான் தேரிக் ஐ இன்சாப்) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மொத்தமுள்ள 272 நாடாளுமன்றத் தொகுதிகளில் 3,459 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அது போல் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பாக்துன்வா ஆகிய 4 மாகாணத்திற்கு சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது.
மாகாண தேர்தலில் 577 இடங்களுக்கு 8,396 பேர் போட்டியிடுகின்றனர். இரண்டு தேர்தல் வாக்குப் பதிவும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவில் நடைபெற்று 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.