ஹிலரிக்காக தேர்தல் நிதி திரட்டும் ஜார்ஜ் க்ளூனி: கூட உக்கார்ந்து சாப்பிட 353 ஆயிரம் டாலர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்(யு.எஸ்). அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி க்ளிண்டனுக்கு, ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக, தனது வீட்டில் டின்னர் விருந்துக்கும் க்ளூனி ஏற்பாடு செய்துள்ளார்.
ஏப்ரல் 16ம் தேதி ஜார்ஜ் க்ளூனியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் நடைபெற உள்ள இந்த விருந்தில், கலந்து கொள்ள தனி நபர் ஒருவருக்கு 33 ஆயிரத்து 400 டாலர் கட்டண்ம். ஹிலரி க்ளிண்டன் சாப்பிடும் டேபிளில் அமர 353 ஆயிரம் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் ஹிலரி
ஜார்ஜ் க்ளூனியும், அவரது மனைவி அமல் க்ளூனியும் ஹிலரியின் டேபிளில் உடன் அமர்ந்து சாப்பிட ஆளுக்கு 353 ஆயிரம் டாலர்கள் நிதியாக கொடுக்கிறார்கள்.
ஹாலிவுட்டின் பிரபலங்கள் பலரும் பங்கேற்கும், இந்த ஆடம்பரமான விருந்தில் சாமானியரான கட்சி ஆதரவாளர் ஒருவரும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்.
விருந்து மூலம் திரட்டப்படும் நிதி அனைத்தும், ஹிலரிக்கு ஆதரவு அளிக்கும் பல்வேறு அரசியல் நிதி அமைப்புகளுக்கும், ஜனநாயகக் கட்சியின் தேசிய மற்றும் மாநில அமைப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கப் படுகிறது.
இந்த விருந்துக் கட்டணம் குறித்து எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன. ஜன நாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் இயக்குனர் ராஜ் ஷா உட்பட பலர், கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வாங்க வாங்க...வந்து சாப்பிடுங்க
அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டுவது மிகவும் வெளிப்படையான ஒன்றாகும். இந்தியாவைப் போல் அல்லாமல், பெரிய நிறுவன்ங்கள் கூட வெளிப்படையாகவே குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கு நிதி கொடுப்பது வழக்கம்.
தனிநபர் என்றால், அமெரிக்க குடிமக்கள் மற்றும் க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே தேர்தல் நிதி கொடுக்க சட்டம் அனுமதிக்கிறது. குறிப்பாக ஹெச் 1 பி விசாவில் வேலை செய்பவர்கள் தேர்தல் நிதி வழங்க முடியாது.
பிரபலங்கள் பலரும், தலைவர்களை அழைத்து விருந்து வைத்து, தலைக்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயித்து தேர்தல் நிதி திரட்டுவதும் முக்கியமான் வழியாகும்.
இந்த தேர்தல் நேரத்தில் பணம் இருந்தால், எந்த முக்கியத் தலைவருடனும் உக்கார்ந்து உணவு அருந்த முடியும் என்பதுதான் அமெரிக்க அரசியல்.
ஒபாமாவின் முதல் தேர்தல் பிரச்சாரத்தில், இப்படிப்பட்ட ஒரு விருந்து அழைப்பில்தான் நம்ம வைகோவும் அவரைச் சந்தித்து தனது புத்தகத்தை வெளியிட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.