அடையாளக் குழப்பத்தால் ஜார்ஜியாவில் சிறையில் இருந்த கைதி ஊரில் இறந்தார்
தான் இறந்துவிட்டதாக உள்ளூர் கிராம மக்கள் அறிவித்த செய்தியை, ஸ்லாவா ப்ருஷ்கோவ் அறியும்போது சுமார் 80 கி.மீ. தொலைவிலுள்ள ஜார்ஜியா துறைமுக நகரமான பாதுமியில் உள்ள சிறையில், ஒரு குறுகிய சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தார்.
விடுதலைக்குப் பிறகு அவர் தொடர்ந்து “அவரது' கல்லறைக்குச் சென்று, கல்லறையை கவனித்துக் கொள்கிறார் என ஜார்ஜியா நாட்டு “ஐபீரியா' தொலைக்காட்சி கூறுகிறது.
ப்ருஷ்கோவ் திடீரென கிராமத்தில் இருந்து காணாமல் போனதை உள்ளூர் மக்கள் கவனித்தபோது, அவர் சிறையில் இருக்கும் செய்தி அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று இந்த தொலைக்காட்சி கூறியது.
அவருக்கு உயிருடன் வாழும் உறவினர்கள் யாரும் இல்லை என்பதால், அவர் காணாமல் போனதாக காவல்துறையிடம் மக்கள் தெரிவித்துள்ளனர் என அத்தொலைக்காட்சி கூறுகிறது.
மக்கள் தகவல் தெரிவித்த சில நாட்களுக்கு முன்பு, வயல்வேளியில் மோசமாக சிதைந்த ஒரு உடலை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
அந்த உடல் ப்ருஷ்கோவின் உடல் எனத் தவறாக கருதி, அவருடைய பெற்றோரின் கல்லறைக்கு அருகே ஒரு கல்லறையை உருவாக்கி அங்கு புதைத்துள்ளனர்.
இத்தவறை பற்றிக் கேள்விப்பட்டபோது, சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முயற்சித்ததாக ருசாவி-2 தொலைக்காட்சியிடம் ப்ருஷ்கோவ் கூறியுள்ளார்.
நான் சிறைக் கதவினை தட்டி, இறந்து போனதாகக் கூறப்படும் நபர் நான் தான். நான் உயிருடன் இருக்கிறேன். நான் ஏற்கனவே மூன்று மாதங்களாக உங்களது சிறையில் தான் இருக்கிறேன் என காவலாளியிடம் கூறினேன் , என்றார் அவர்.
தவறாக அடையாளம் காணப்பட்ட உடல், அவரது பெற்றோரின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
நான் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, எனது தாய் மற்றும் தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்யச் சென்றேன். அவர்களது கால்களுக்கு அருகில், புதிதாக இறந்தவரின் கல்லறை ஒன்று இருந்தது. அக்கல்லறையில் இருப்பவர் யார் என்பது எனக்குத் தெரிவில்லை என கூறினார்.
இருப்பினும், ப்ருஷ்கோவ் அக்கல்லறையைக் கவனித்து கொண்டிருக்கிறார். ஜோர்ஜியாவின் வழக்கப்படி, கடந்த ஈஸ்டர் அன்று சிவப்பு முட்டைகள், ஒயின் மற்றும் பிற பொருட்களை வைத்து கல்லறைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதையும் படிக்கலாம் :
கத்தியைத் திருடிய கனடா காகம், தபால் ஊழியரைத் தாக்கி, தபால் சேவையை நிறுத்தியது
பசு பக்தி என்ற பெயரால் நடக்கும் படுகொலைகளை ஏற்க முடியாது: மோதி
“சௌதியா விமானம் இஸ்ரேல் விமான நிலையத்தில் இருப்பதைக் காட்டும் படம் போலி”