துரத்தி துரத்தி தொல்லைக் கொடுப்பதாக பெண் புகார்... ஜெர்மனியில் ‘அணில்’ கைது
பெர்லின்: தொந்தரவு கொடுப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெர்மனி போலீசார் அணில் ஒன்றைக் கைது செய்துள்ளனர்.
ஜெர்மனி போலீசாரின் அவசர பிரிவுக்கு கடந்த புதன்கிழமையன்று வினோதமான புகார் ஒன்று கிடைத்தது. அதாவது, வடக்கு ரெயின் வாஸ்பாலியாவிலுள்ள பாட்ராபை என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர், அணில் ஒன்று தனக்கு தொல்லைக் கொடுப்பதாக அப்புகாரில் தெரிவித்திருந்தார்.
மேலும், ''நான் மேற்கு ஜெர்மன் நகரில் உள்ள தெரு வழியாக செல்லும்போது, என்னை அணில் ஒன்று விரட்டியடிக்கிறது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு உதவ வேண்டும்'' என அப்பெண் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பெண் காட்டிய அடையாளங்களின் படி சம்பந்தப்பட்ட அணிலைக் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "அந்த அணிலை கைது செய்து காவலில் வைத்திருக்கிறோம். அந்த அணிலுக்கு சோர்வு நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அணிலுக்கு போலீஸ்காரர் ஒருவர் உணவு அளிப்பது போன்ற புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.