ஐஎஸ்ஐஎஸ் க்கு எதிரான போர்... துப்பாக்கி பயன்படுத்த குர்துக்களுக்கு ஜெர்மனி பயிற்சி
பெனிஸ்லாவா, ஈராக்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கான தாக்குதல் தொடர்பான பயிற்சியை குர்து இனத்தவருக்கும், படையினருக்கும், ஜெர்மனி வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
நவீன ரக ஜெர்மனி துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி இது. இதுதொடர்பான பயிற்சி ஈராக் குர்திஷ் சுயாட்சிப் பகுதியின் தலைநகரான இர்பில் நகரில் நடக்கிறது.
இதுகுறித்து குர்திஷ் படையைச் சேர்ந்த ஹமத் என்பவர் கூறுகையில், இந்த துப்பாக்கி சிறப்பாக உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஜெர்மனி படையினர் பயிற்சி கொடுத்துள்ளனர். பெரிய அளவில் இதன் எடை இல்லை. எனவே பயன்படுத்தும்போது சிறப்பாக உள்ளது. என்றார்.
முதல்கட்டமாக...
ஹமத் மற்றும் 19 பேருக்கு முதல் கட்டமாக இந்த துப்பாக்கிப் பயிற்சியை ஜெர்மனி அளித்துள்ளது. குர்திஷ் படையினருக்கு ஆயுதங்களை வழங்குவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனி அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். அதன்படி தற்போது துப்பாக்கிகளை அது வழங்கியுள்ளது.
ராக்கெட் லாஞ்சர்கள்...
16,000 எச்கே ஜி3 மற்றும் எச்கே ஜி36 ரக துப்பாக்கிகள்,8000 பிஸ்டல்கள், டாங்குகளைத் தாக்கித் தகர்க்கும் ராக்கெட் லாஞ்சர்களை ஜெர்மனி வழங்கியுள்ளது. இதுபோக டென்டுகள், தலைக் கவசங்கள், ரேடியோ சாதனங்கள் ஆகியவற்றையும் ஜெர்மனி வழங்கியுள்ளது.
6 பயிற்சியாளர்கள்...
தற்போது 70 மில்லியன் ஈரோ மதிப்பிலான ஆயுதங்களை ஜெர்மனி, குர்திஷ் படையினருக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மேஜர் புளோரியன் தலைமையிலான 6 பயிற்சியாளர்களைக் கொண்ட பயிற்சிக் குழுவும் குர்துக்களுக்குப் பயிற்சி தர வந்துள்ளனர்.
குர்துகளுக்குப் பயிற்சி...
புதிய துப்பாக்கிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இவர்கள் குர்துக்களுக்குப் பயிற்சி தருவார்கள். ஜி3 என்பது ஏகே 47 துப்பாக்கி போல கிடையாது. மாறாக சற்று நீளமானது. ஏகே 47 துப்பாக்கியை விட எடைக் குறைவானது, பயன்படுத்துவதற்கும் எளிதானது.
கடினம்...
இதுகுறித்து ஜெர்மனி படையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நவீன ஆயுதங்கள் இல்லாமல் தீவிரவாதிகளை சமாளிப்பது என்பது கடினமானது என்றார்.