கேப்டன் குடித்த காபியில் உச்சா போக வைக்கும் மருந்தை கலந்த ஜெர்மன்விங்ஸ் துணை விமானி
டுசல்டார்ப்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் கேப்டன் பேட்ரிக்கிற்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும் மருந்தை காபியில் கலந்து கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் லுபிட்ஸ், கேப்டன் பேட்ரிக் உள்பட 150 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தை அடுத்து லுபிட்ஸின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கம்ப்யூட்டர், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் எவ்வாறு தற்கொலை செய்வது என்றும், விமானி அறை கதவின் பாதுகாப்பு சிஸ்டம் பற்றியும் சம்பவம் நடப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு இணையதளத்தில் ஆய்வு செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் அவர் இணையதளத்தில் வேறு ஒன்று பற்றி தேடியதும் தெரிய வந்துள்ளது. அதாவது அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்ய உதவும் மருந்து பற்றி தான் லுபிட்ஸ் ஆய்வு செய்துள்ளார்.
லுபிட்ஸ் கேப்டன் குடித்த காபியில் சிறுநீர் கழிக்கத் தூண்டும் மருந்தை கலந்து கொடுத்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்த காபியை குடித்த பிறகு பேட்ரிக் கழிப்பறைக்கு சென்றுள்ளார். அவர் விமானி அறையை விட்டு வெளியே சென்றதும் கதவை பூட்டிக் கொண்ட லுபிட்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
மன அழுத்தம், கண் பார்வை கோளாறு, வெளியே சொல்லாத நோய் ஆகியவற்றால் அவதிப்பட்ட லுபிட்ஸ் தற்கொலை செய்ய விமானத்தை மலை மீது மோதியுள்ளார் என்று நம்பப்படுகிறது.