ஜெர்மன் நாடாளுமன்ற தேர்தல்... நான்காவது முறையாக வென்றார் ஏஞ்சலா மெர்கல்!
பெர்லின்: ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்றார். விரைவில் அவர் மீண்டும் அதிபராக பொறுப்பேற்கிறார்.
ஜெர்மனி நாடாளுமன்றத்தில் மொத்தம் 598 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அரசின் பதவிக்காலம் முடியும் நிலையில், அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்தது.
கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிட்டனர். மேலும் 5 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த வெற்றி குறித்து ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், "எதிர்ப்பார்த்ததை விட குறைவான வாக்குகள்தான் கிடைத்துள்ளன. ஆனாலும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி," என்றார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் தொடர்ந்து நான்கு முறை அதிபராகப் பதவி வகிப்பவர் என்ற பெருமை ஏஞ்சலாவுக்குக் கிடைத்துள்ளது.