மோசமாகிறது நிலைமை... ஜெர்மனியில் பிப்.14 வரை ஊரடங்கு நீட்டிப்பு
பெர்லின் : ஜெர்மனியில் பகுதி நேர ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார்.
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும், மேலும் பரவுவதை தடுக்கவும் நாடு முழுவதும் பகுதிநேர ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்பெனிகள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து பயன்பாட்டை பணியாளர்கள் குறைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகள் தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும். அவற்றை வாங்குவதற்காக பொது போக்குவரத்தை பயன்படுத்தவும், சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் மருத்துவ முகக்கவசம் அல்லது அதீத பாதுகாப்புக் கொண்ட எப்எப்பி2 முகக்கவசங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள், அத்தியாவசிய பொருட்கள் இல்லாத கடைகள், உணவகங்கள், விளையாட்டு வசதி கொண்ட கூடங்கள் ஆகியன தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இவ்வாறு ஏஞ்சலா மெர்கலின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.