இனிமேலும் எங்களால் முடியாது: ஆஸ்திரியாவுக்கான ரயில் போக்குவரத்தை நிறுத்திய ஜெர்மனி
வியன்னா: அகதிகள் பிரச்சனை காரணமாக ஆஸ்திரியாவில் இருந்து வரும் ரயில்களை எல்லைக்குள் அனுமதிக்க ஜெர்மனி மறுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான அகதிகள் அதிலும் பெரும்பாலானோர் சிரியாவைச் சேர்ந்தவர்கள் தங்களின் நாடுகளை விட்டு வெளியேறி ஆஸ்திரியாவை அடைந்து அங்கிருந்து ரயில் மூலம் ஜெர்மனி செல்கின்றனர். அகதிகளை ஏற்றுக் கொள்வதாக ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் கடந்த வாரம் அறிவித்ததில் இருந்து அங்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிக அளவில் அகதிகள் வருவதால் ஆஸ்திரியாவில் இருந்து வரும் ரயில்களை எல்லையுடன் நிறுத்தியது ஜெர்மனி. மேலும் ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரியாவுக்கு செல்லும் ரயில்களையும் நிறுத்தியது. இந்த ரயில் நிறுத்தம் நேற்றில் இருந்து இன்று காலை 6 மணிவரை 13 மணிநேரம் அமலில் இருந்தது.
இது குறித்து ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் டி மெய்சர் கூறுகையில்,
ஜெர்மனிக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், அவர்கள் இங்கு வருகையில் முறைப்படி ஏற்றுக் கொள்ளவுமே இந்த நடவடிக்கை. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது என்றார்.
இந்த ஆண்டு மட்டும் செர்பியாவில் இருந்து 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் ஹங்கேரி வந்து அங்கிருந்து ஆஸ்திரியா வழியாக ஜெர்மனி சென்றுள்ளதாக ஹங்கேரி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் ஜெர்மனிக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 8 லட்சம் பேர் அகதிகளாக ஜெர்மனிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.