ஓசோன் மண்டலத்தையே அழிக்கக்கூடிய ராட்சத விண்கல்... 31ம் தேதி பூமியைக் கடக்கிறது!
வாஷிங்டன்: பூமியைத் தாக்கி ஓசோன் மண்டலத்தை அழிக்கும் என அஞ்சப்பட்ட ராட்சத விண்கல் இம்மாதம் 31ம் தேதி, பூமியை சேதப்படுத்தாமல் கடந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவற்றில் பூமியை நோக்கி வரும் சில விண்கற்கள் புவியை அடைவதற்கு முன்னதாகவே சாம்பல் ஆகிவிடுகின்றன. மேலும் சில பல துண்டுகளாக உடைந்து விழுந்து, பூமிக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன.
அந்தவகையில், பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்றை கடந்த 10ம் தேதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்த விண்கல்லிற்கு 2015 TB145 எனப் பெயரிடப்பட்டது.
ஓசோன் மண்டலம் அழியும்...
280 முதல் 620 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல்லானது பூமியின் மீது மோதினால், ஓசோன் மண்டலம் முற்றிலுமாக அழியும் அபாயம் கொண்டது. இதனால், பூமியின் பருவ நிலைகளில் பல பருவநிலை மாறுதல்கள் உருவாகும் என அஞ்சப்பட்டது.
நம்பிக்கை...
ஆனால், தற்போது அந்த விண்கல்லானது பூமியைத் தாக்காமல் கடந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
வரும் 31ம் தேதி...
மணிக்கு 125,529 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல், இம்மாதம் 31ம் தேதி 4,99,000 கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராட்சத விண்கல்...
2006ம் ஆண்டுக்குப் பிறகு பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும் விண்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது.