அண்டார்டிகாவில் உடைந்த பிரமாண்ட பனிப்பாறை.. சென்னையை விட 13 மடங்கு பெருசு.. அம்மாடி!
அண்டார்டிகா கண்டத்தில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பாரிஸ்: உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் சென்னையை போன்ற 13 மடங்கு அளவுள்ள பனிப்பாறை உடைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அண்டார்டிகா பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூர்யவெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.
ஆண்டில் ஆறு மாதங்கள் சூரியனின் வெளிச்சமே இருக்காது. இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுக் கூடங்கள் மட்டுமே இங்கு செயல்பட்டு வருகின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருவதால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
முழுவதும் உடைந்த பனிப்பாறை
இந்நிலையில், மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவால், பனிப்பாறை ஒன்று பிரிந்து சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பனிப்பாறையானது முழுவதுமாக உடைந்து
பிரிந்துவிட்டது என நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. ஜூலை 10ம் தேதி முதல் விரிசல் அதிகரித்து ஜூலை 12ம் தேதி பனிப்பாறை உடைந்துள்ளது.
சென்னையை போல 13 மடங்கு
5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த பனிப்பாறை சென்னையை போன்று 13 மடங்கு பெரியதாகும். 2016 அளவீடுபடி சென்னை மெட்ரோபாலிடன் பகுதி 426 சதுர கிலோ மீட்டர் என கணிக்கப்பட்டுள்ளது. பனிப்பாறை உடைந்து சென்றதையடுத்து இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதா என்றும் ஆராய்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உடனடி பாதிப்பு இல்லை
கடந்த 1995 மற்றும் 2002ல் அண்டார்ட்டிக்காவின் வடக்கில் உள்ள பனியடுக்கான லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின. அதே போன்று இப்போது இந்த பனிப்பாறை உடைந்துள்ளது, இதனால் உடனடியாக கடல்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு இல்லை எனினும் எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
மிகப்பெரிய பனிப்பாறை
உடைந்து மிதந்து கொண்டிருக்கும் பனிப்பாறையை பலகாலமாக ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் ஆய்வாளர்கள் கண்காணித்து வந்துள்ளனர். இதுவரை பிரிந்து வந்த மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான இதற்கு ஏ 68 என்று பெயரிடப்பட்டுள்ளது. பனிப்பாறை பிரிந்து விட்டதால் லார்சின் சி எனும் பனி அடுக்கில் 12 சதவீத பரப்பு குறைந்திருக்கிறது.