பலமாக வீசிய காற்று.. பிய்த்துக் கொண்டு பறந்த கண்ணாடிகள்.. 330 அடி உயரத்தில் தொங்கிய சுற்றுலாப்பயணி!
சீனாவில் பலத்த காற்றால் சேதமடைந்த கண்ணாடி பாலத்தில் ஆண் ஒருவர் தள்ளாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
பீஜிங்: சீனாவில் பலத்த காற்றால் சேதமடைந்த கண்ணாடி பாலத்தில் ஆண் ஒருவர் தள்ளாடும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபகாலமாக சாகசப் பிரியர்களின் பிடித்த விஷயமாக மாறி வருகின்றன சீனாவின் கண்ணாடி பாலங்கள். கண்ணாடிகளைக் கொண்டு இரு மலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் அந்த பாலங்களை நடந்து கடப்பது என்பது சாகசப் பிரியர்களுக்கு அலாதியான இன்பத்தை தருகின்றன.
டேய் தம்பி சத்தமா அழுடா.. இல்லாட்டி இந்த லாக்டவுணால நம்ம சொத்தை மூணா பிரிக்க வேண்டி வந்துடும்!
எனவே தான் சீனாவின் கண்ணாடி பாலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் அந்த பாலங்களில் விபத்துகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
330 அடி உயரம்
அந்த வகையில் சீனாவின் லாங்ஜிங் நகரத்திற்கு அருகே பியான் மலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இருமலைகளை இணைக்கும் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 330 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தில் நடந்து செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருவது வழக்கம். கண்ணாடி பாலத்தில் நடக்கும் போது அந்தரத்தில் நடப்பது போன்ற த்ரில்லிங்கை பெறுவதற்காகவே அங்கு மக்கள் அதிகமாக வருகின்றனர்.
காற்றில் பறந்த கண்ணாடிகள்
அதன்படி சம்பவத்தன்று சுற்றுலா பயணி ஒருவர் அந்த பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பாலத்தின் மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் ஒவ்வொன்றாக காற்றில் பறந்து போக ஆரம்பித்தன. பாலத்தை பாதி கடந்துவிட்ட நிலையில் அப்பயணியால் இந்தப்பக்கமும் செல்ல முடியவில்லை, அந்தப் பக்கமும் ஓட முடியவில்லை.
அந்தரத்தில் தொங்கிய பயணி
இதனால் பயந்துபோன அந்தப் பயணி, இரு பக்கங்களிலும் உள்ள இணைப்பு கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் அவர் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. சோதனை மேல் சோதனையாக காற்றின் வேகம் மேலும் அதிகரித்து, மணிக்கு 90 மைல் என்ற வேகத்தில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் பெரும்பாலான கண்ணாடிகள் பீய்த்துக்கொண்டு காற்றில் பறந்தன.
பத்திரமாக மீட்பு
இதனால் மேலும் பதற்றமடைந்த அந்தப் பயணி உதவி கேட்டு ஒலி எழுப்பினார். இதையடுத்து இந்த ரிசார்ட் நிர்வாகிகள் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினரின் உதவியை நாடினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்களும், காவல் துறையினரும் அந்த பயணியை பத்திரமாக மீட்டனர்.
மனரீதியான பாதிப்பு
மீட்கப்பட்ட அந்த பயணிக்கு அதிர்ஷ்டவசமாக உடலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தால் அவருக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். எனவே அவருக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து, மீண்டும் சகஜ நிலைக்கு அவரைக் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனராம். சாகசம் செய்ய ஆசைப்பட்டு, இப்படி ஆபத்தில் சிக்கிய அந்த பயணியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.