இந்தியாவில் அதிகரிக்கும் டி.பி. நோயாளிகள் எண்ணிக்கை.. அவசரமாக கவனிக்க உலக சுகாதார நிறுவனம் வார்னிங்
ஜெனிவா: உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகளாவிய காச நோய் (டி.பி)-2016 அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், காச நோய் பாதிப்பில் இந்தியா அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் அம்பலமாகியுள்ளது. 2014ஸ் இந்தியாவில் டி.பி நோயாளிகள் 2.2 மில்லியன் என்ற அளவில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த வரும் 2.8 மில்லியனாக உயர்ந்துள்ளது ஒரு அபாயக்குறியாகும்.
இந்தியாவில் 48 லட்சம் பேர் டி.பி. நோயால் உயிரிழந்துள்ளதாக கூறும் இந்த புள்ளிப்பட்டியல், உலக அளவில் உயிரிழந்த நோயாளிகளில் இது கால் பங்கு என்றும் கூறுகிறது.
உலக மொத்த டி.பி. நோயாளிகளில் 60 சதவீதம் பேர், இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்தவர்கள். எனவே டி.பி. நோயை குணப்படுத்தும் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
டி.பி. பரவலை குறைப்பதில் இந்தியா, 1.5 சதவீதம் என்ற அளவில் பின்தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. டி.பி. நோயாளிகளை இனம் கண்டு அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் குறைபாடு இருக்கிறது. 10.4 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டபோதிலும் 6.1 மில்லியன் பேர்தான் அதிகாரப்பூர்வமாக மருந்து உட்கொள்ளச் செய்யப்பட்டுள்ளனர். 4.3 மில்லியன் பேர் அடையாளம் காணப்படவில்லை என்பது மிகப்பெரிய விஷயம்.
இதுபோல அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நாடுகளில் 77 சதவீதத்தை இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகள் பகிர்ந்துகொண்டுள்ளன. அதிலும், இந்தியா, இந்தோனேஷியா மற்றும் நைஜீரியா நாடுகள் 60 விழுக்காடு இடத்தை பிடித்துள்ளன என்பது பெரும் பின்னடைவாகும்.
எக்டிஆர்-டிபி எனப்படும், இரண்டாம் கட்ட டிபி சிகிச்சையை உலக அளவில் 7234 பேர் மேற்கொண்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டான 2014ஐவிட இரு மடங்கு அதிகமாகும். இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 2130 என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன், ரஷ்யா அதன்பிறகு வரும் நாடுகள்.
இந்த வகை டி.பி. நோயாளிகளில் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளோர் இந்தியா, இந்தோனேஷியாவில் வெறும் 40 சதவீதத்திற்கும் உட்பட்டோர்தானாம். சுகாதார நிறுவனம் இந்த தகவல்களை கூறியுள்ளதோடு, இந்தியா இந்த தொற்று நோயை குறைக்க அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது.